Sunday, July 28, 2013

ம.வீ.இராவுக்கு உ.வே.சா எழுதிய கடிதங்கள்

கும்பகோணம் மஹாபாரத மொழிபெயர்ப்பு பற்றித் தெரிவதற்கு உ.வே.சா. அவர்களின் கீழ்க்கண்ட கடிதங்கள் போதுமே!

கடிதம் 1: 

சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர்களாகிய மஹா வித்வான் பிரம்மஸ்ரீ மஹாமஹோபாத்தியாய, தாக்ஷிணாத்திய கலாநிதி, திராவிட வித்யாபூஷணம், டாக்டர் வே.சாமிநாதையரவர்கள், 4-8-08:-

"இந்தப் பாரதவசனத்தைப் பார்க்கும்பொழுது எனது உள்ளம் மிக இன்புறுகின்றது. அழகிய பற்பல உபாக்கியானங்களும் தர்மங்களும் நிறைந்துள்ள வியாஸ பாரதத்தின் பொருளை ஒழுங்காக அறிந்துகொள்வதற்கு இதைப் போன்ற ஸாதனம் இக்காலத்தில் தமிழில் வேறே இல்லை. இங்ஙனம் செய்விக்க வேண்டுமென்று பல வருடங்களாக இருந்த என்னுடைய எண்ணம் இதைப் பார்த்த பின்பு அடியோடே நின்றுவிட்டது. இத் தமிழ்நாட்டுப் பிரபுக்களும் வித்வான்களும் ஆதரித்து இதை முற்றுப்பெறச் செய்வார்களென்று நம்புகிறேன். இவ்வரிய காரியத்தைச் சலிப்பின்றிச் செய்துவரும் ஸ்ரீமத், ம வீ. இராமாநுஜாசாரியரவர்கள் விஷயத்தில் நன்றி செலுத்தத் தமிழுலகம் கடமைப்பட்டிருக்கின்றது. படிப்பவர்களுக்கு நல்லொழுக்கத்தைத் தெரிவிப்பதாகிய இப்புத்தகம் மிகவும் எளிய நடையாக இருந்து விளங்குதலின், ஒவ்வொருவர் கையினும் இருக்கு வேண்டுமென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

கடிதம் 2: 

 மஹா வித்வான், பிரம்மஸ்ரீ, மஹாமஹோபாத்தியாய, தாக்ஷிணாத்திய கலாநிதி, திராவிட வித்யாபூஷணம், டாக்டர் வே.சாமிநாதையரவர்கள், சென்னை, 14-10-1920:-

"நேற்றையதினம், தாங்கள் அன்புடன் அனுப்பிய ஸ்ரீமஹாபாரதத்தின் 24-ஆம் சஞ்சிகையாகிய துரோண பர்வம் வரப்பெற்றுப் பரமானந்த பரிதனானேன். முதலிலிருந்து படிக்கத் தொடங்கிச் சில பாகம் படித்து முடித்தேன். விஷயங்களின் அருமையும் மொழிபெயர்ப்பின் சிறப்பும் ஆகிய இவைகள் மனத்தை மிகவும் கனியச் செய்து தங்களுடைய அரிய முயற்சியைப் புலப்படுத்துகின்றன.

தேவரீர் செய்துவரும் இந்த மஹோபகாரத்தைக் காட்டினும் தமிழ்ப் பாஷைக்கும் தமிழ் நாட்டினர்க்கும் செய்ய வேண்டிய பேருதவி யாது உளது! இப் பெருங் காரியத்திற்கு வேண்டிய அனுகூலங்களை இதுவரையில் செய்திலராயினும் நம் தமிழ்நாட்டுக் கன தனவான்கள் இனியேனும் விழித்துக்கொண்டு இவ்வரிய செயலை நிறைவேற்றும்படி தக்க திரவியஸஹாயஞ் செய்து தங்களுக்கு ஊக்கமளிப்பாரகளென்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் யாதொரு மனக்கவலையும் இல்லாமலிருக்கும்படி செய்யும் வண்ணம் எல்லாம்வல்ல இறைவனது திருவடித்தாமரைகளைச் சிந்திக்கிறேன்."

கடிதம் 3: 

 மஹா வித்வான், பிரம்மஸ்ரீ, மஹாமஹோபாத்தியாய, தாக்ஷிணாத்திய கலாநிதி, திராவிட வித்யாபூஷணம், டாக்டர் வே.சாமிநாதையரவர்கள், சென்னை, 19-2-1932 மாலை மணி-3:-

"தேவர் 16-18 ஆம் தேதிகளில் அனுப்பிய கடிதங்களும் ஒப்புயர்வற்ற ஆனந்தத்தை விளைவிக்கும் ஸ்ரீமஹாபாரத வனபர்வ மொழிபெயர்ப்பின் ஸஞ்சிகையும் வரப்பெற்று மிக்க இன்பமுற்றேன். ஸஞ்சிகையிலுள்ள முகவுரையைக் காலையிலிருந்து படித்துவந்து இப்போது தான் பூர்த்தி செய்தேன். இது மிக நன்றாக இருக்கிறது. ஆரம்ப முதல் இது காறுமுள்ள செய்திகளையும், கல்வியாலும் செல்வத்தாலும் உதவி புரிந்தவர்களையும், பிறவாறு உதவிபுரிந்தவர்களையும், தக்கவண்ணம் முறையே எழுதிவந்திருப்பது மிக்க திருப்தியை விளைவிக்கின்றது. இதுவும் சிரமஸாத்யமே.


உலகமுள்ளவரையும் அழியாதனவாகிய புகழையும் புண்ணியத்தையும் மிக்க உழைப்பினாலடைந்த தேவரீரைப் போன்றி உபகாரிகள் யாருள்ளார் ! யாதொரு கவலையுமின்றி வச்சிர சரீரத்தோடு நெடுங்காலம் வாழ்ந்து விளங்கும்படி செய்வித்தருளும் வண்ணம் ஸர்வேசுவரனைப் பிரார்த்திக்கிறேன். இன்றைத்தினம் மிகவும் உத்தமமான தினமே.

No comments:

Post a Comment